Labels

Saturday, 31 March 2018

வண்ணத்துப்பூச்சிகள்

இன்று விடுமுறை. வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் வெளியில் செல்லமுடியவில்லை. வீட்டிலேயே பொழுதை கழிப்பது மிகவும் சிரமமாயிருந்தது .

எவ்வளவு நேரம் தான் மடிக்கணினியுடனும்
சூட்டிகைபேசியிடனும் தொலைக்காட்சிப்பெட்டியோடும் இருப்பது .???

எண்ணிப்பார்க்கிறேன்,!!!இந்த தலைமுறை குழந்தைகளின் நிலையை .

பள்ளி முடிந்து வீடு திரும்பும் அவர்களின் மாலைபொழுதுகள் தினமும் இப்படித்தானே இருக்கும் .

 "வெளியே போய் விளையாடாதே ! ஏதாவது ஆகிவிடப்போகிறது உனக்கு !! பேசாமல் வீட்டிலே ஏதாவது விளையாடு! இந்தா இந்த புதிய சூட்டிகைப்பேசி , இதில் ஏதாவது விளையாட்டை  பதிவிறக்கம்  செய்து விளையாடு "என்று சொல்லும் அம்மாக்களின் எண்ணிக்கை  98 சதவிகிதம் .

அதுவும்  அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளென்றால் அவர்கள் நிலைமை சொல்லும்படியாக இல்லை!. பக்கத்துவீட்டில் இருப்பவர்களை தெரிந்து வைத்திருத்தல் ஏதோ மிகப்பெரிய பாவச்செயல் என்றே திணிக்கப்பட்டு  வளர்க்கப்படுகிறார்கள்  .

நான் படிக்கும்போது தெரிந்திருக்கவில்லை இந்த தொழில்நுட்ப விளையாட்டுகளெல்லாம் . எங்களுக்கு தெரிந்தது எல்லாம் வெளியில் சென்று விளையாடுவது தான்.


புதைமிதி ஏதுமில்லாமல் புழுதியியில் விளையாடிய நாட்கள் அவை .

அத்தனையும் நினைவிற்கு வரவில்லை . நினைவில் எட்டியவை சில தருணங்கள் -.

1.பம்பரம்- வட்டத்திற்குள் ஒருவரின் பம்பரம் மாட்டும் . மற்றவர்கள் அதை வெளியில் எடுக்க பம்பரத்தை ஓங்கி வீசுவார்கள் . வீசுபவனின் பம்பரத்தின் ஆணி நம் பம்பரத்தின் மேல் படும்போது கண்கள் கலங்கி விடும் .

ஆனால் அதிகம் அடிவாங்கும் பம்பரமே நன்கு சுழலும் .அதிகம்  அடிவாங்குகிற பம்பரங்கள் மெருகேறுவதைப் போல, அதிகமான  பிரச்சனைகளை சந்திக்கிறவனின் மனமும் வலிமையடைகிறது.

2. பச்சக்குதிரை - ஒருவன் குனிந்திருக்க அவனை தாண்டுவதே இந்த விளையாட்டு . சுற்றுக்கு சுற்று குனிந்திருப்பவன் சற்று உயரத்தை அதிகமாக்குவான் . கடைசி சுற்றில் எழுந்தே நிற்பான். அதையும் தாண்டவேண்டும் .

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தாண்டி செல்லும் வலிமை நமக்குள் இருக்கிறது .

3. கோலி - கலர்கலராக கோலி குண்டுகளை வாங்கி வைத்தாலும் அது பெரிய கோலியால் அடித்து உடைக்கப்படும் .

என்ன தடைகள் வந்தாலும் உடைத்தெறி .






4. கில்லி. கிரிக்கெட்டுக்கு மூலதனமே கில்லி தான்.







5. பட்டம் - பழைய தினத்தந்தி நாளிதழில் இக்குச்சிகளை வைத்து , சோற்று பருக்கைகளை கொண்டு குச்சிகள் நகராமல் ஒட்டி நாமே செய்த பட்டம் மேலே பறக்கும் போது,  நாமே பறப்பது போன்று ஓர் உணர்வு .


வெறும் பேப்பர் பறக்காது . அதற்கு சரியான வடிவம்கொடுத்து  இக்குச்சிகள் தாங்கி பிடிப்பதுபோல் நாமும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கொஞ்சமாவது உதவியாக இருப்போம் .

6. திருடன் போலீஸ் - ஒரு குழு திருடர்களை ஒரு குழுவாக போலீஸ் கண்டுபிடிப்பது ...

குழுவாக செயல்பட்டால் எந்த செயலையும் எளிதாக செய்யலாம் . இது இன்று அலுவலகங்களில் ஒரு திறனாக பயிற்சிவகுப்புகளெல்லாம் வைத்து கற்று தருகிறார்கள் .! இது நாம் சிறு வயதிலே கற்று விட்டோமே!!


இன்னும் விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன . எழுதினால் பக்கங்கள் தாண்டிவிடும் . அதனால் பட்டியலிடுகிறேன் 

*கண்ணாமூச்சி (ஐஸ்பாய்) 
*பாண்டி 
*சைக்கிள் பந்தயம் 
*கல்லா மன்னா 
*நாடு பிரித்தல் 

கண்டிப்பாக கிரிக்கெட்டும் தான். 


வெறும் காலில் மண்ணில் விளையாடி இந்த மண்ணோடு உறவாய் இருந்த நாட்கள் மறைந்து விட்டன !!! மறைந்தும் விட்டன !!

 கை  கால்களில் பெற்ற தழும்புகளை பார்க்கும்போது தான் தெரிகிறது, தழும்புகள் மறையாது  போல் இந்த நினைவுகளும் மறையாதென்பது ..

ஓடிவிளையாட வேண்டிய குழந்தைகளை வீட்டில் அடைத்து வைப்பது அவர்கள் சிறகுகளை வெட்டுவதை போல் ...

அந்த வண்ணத்துப்பூச்சிகளை சுதந்திரமாக பறக்கவிடுவோம் !!




No comments:

Post a Comment