Labels

Tuesday, 29 October 2019

எங்கள் வீட்டுப் பிள்ளை


அந்த பாப்பாவை எப்புடியாச்சும் காப்பாத்திரனும்  -  கடந்த நான்கு நாட்களாய் இது தான் ஒட்டு மொத்த தமிழகத்தின்  ப்ராத்தனை.

தீபாவளியன்று சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில்  பார்ப்பதை விட செய்திகளைத்தான் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருந்தோம். 

இதுவரை மழை எப்போ வரும் எப்போ வருமென்று  காத்திருந்த நாம் -
 "மழை வராது "என்ற செய்தியை வானிலை ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து எதிர் நோக்கிய நாட்கள் இவையே. 

 மீட்புப்படையினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியின்போதும்  இம்முறை  காப்பாற்றிவிடுவார்கள் இம்முறை காப்பாற்றிவிடுவார்கள் என்று பெரும் நம்பிகையோடு காத்திருந்தோம்.  

என்பது மணிநேரம் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லை. 

அந்த குழந்தை எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருக்கும். மூன்று நாட்களாய் நீரின்றி  உணவின்றி மண்ணில் புதைந்து.,,,,,,
 இதை நினைத்துப் பார்த்து எழுதுவதற்கே என்னால் முடியவில்லை. நீ எப்படி தாங்கினாய் செல்லமே ! 
நினைத்துப்பார்க்கையில் இவ்வளவு மணிநேரம் நரகவேதனையை உனக்கு கொடுக்காமல் நொடியிலே உயிர் பிரிந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது . உன்னை காப்பாற்ற முடியாத எங்களை மன்னித்துவிடு சுர்ஜித். 

எனக்கே கண் கலங்குகிறதென்றால் நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இது எத்துணை வேதனையை தந்திருக்கும். 

அந்த குழந்தையை இதுவரை பார்த்ததில்லை . எனினும்  தமிழகமே கண்ணீர் சிந்துகிறது. 

கூடவே கோபமும் எரிச்சலும் வந்திருக்கும் . 

காரணம் ;-

இவ்வளவு அறிவியல் வளர்ச்சிகளை வெற்றிகரமாய் மேற்கொள்ளும் நம்மால் ஆள்துளைக் கிணற்றிலிருந்து ஒரு குழந்தையை உயிரோடு மீட்கமுடியவில்லையே. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராச்சியில் என்ன பயன். 
 தமிழக மீட்புப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு துறை இன்னும் எத்துணை பேர் இருந்தும் என்ன பலன் . யாரும் பொறுப்பாக செயல்படவில்லை . 
ஆழ்துளைக்கிணற்றிலிருந்து மீட்டெடுக்க ஒரு எந்திரம் இல்லை ,ராட்சத இயந்திரங்கள் சரியாக தோண்டவில்லை. அதிகாரிகளும் அமைச்சர்களும் மெத்தனமாக செயல்பட்டதால் தான் சுஜித்தை இழந்துவிட்டோம்.

இப்படி அடுத்தவரை சொல்லிக்கொண்டே இருக்கவும் நாம் தவறவில்லை.


மீட்புப்பணியில் - இது ஏன் பண்ணல ? அது ஏன்  பண்ணல ? 
அப்போ இந்த மீட்பு பணி சரியாத்தான் நடந்துச்சான்னு கேட்டா ?
தப்பா ஏதும் நடந்துவிடக்கூடாது . அவசரஅவசரமாக செயல்பட்டு தவறாகி விடக்கூடாது .குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று யோசித்து செயல்பட்டார்கள் -
என்பதே என் கருத்து. 


குப்பைகளை குப்பை தொட்டியில் போடாத ________, போக்குவரத்து விதிகளை பின்பற்றாத _______. ஓட்டுரிமையை விற்றுவிட்ட _______, அவசர சிகிச்சை வாகனத்திற்கு கூட வழிவிடாத _______, தண்ணீரை வீணாக்கிவிட்டு மழைநீரை கூட சேமிக்க தவறிய ______, ஆழ்துளை கிணறுகள் மூடாமல் இருப்பதை பார்த்தும் பார்க்காமல் சென்ற _______ -உங்களுக்கு  இதை பற்றிக் கேட்க தகுதியே இல்லை. 



( _____ ல் நானும் அடங்குவேன் ..)


ஆழ்துளை கிணறுகள் இதற்குமேலும் ஒரு உயிரை கூட குடிப்பதற்கு அனுமதிக்காமல் இருப்பதே  சுஜித்திற்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.